அரசுக்கு எதிராக மதத்தலைவர்களின் போராட்டம் இரவோடு இரவாக தொடர்கின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்து பௌத்த பிக்குகள் உள்ளிட்ட கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் மதத்தலைவர்கள் உள்ளிட்டோர் இணைந்து மேற்கொள்ளும் போராட்டம் இன்று மாலை முதல் இரவு வரை இடம்பெற்று வருகின்றது.
கொழும்பு புறக்கோட்டையில் குறித்த போராட்டம் இரவு 10 மணியையும் தாண்டி இடம்பெற்று வருகின்றது.
எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை நாட்டில் இடம்பெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
9 ஆம் திகதி சனிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்துடன் ஒன்றிணையும் வண்ணம் இந்த போராட்டங்களை மதத் தலைவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி இன்று (7) கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பெளத்த மத தேரர்கள் புறக்கோட்டை நோக்கி பேரணி ஒன்றினை ஆரம்பித்து புறக்கோட்டையில் சத்தியாகிரகம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் சிலாபத்திலிருந்து கத்தோலிக்க மத அருட்தந்தையினரும் அருட் சகோதரிகள் உள்ளிட்ட பொது மக்கள் பேரணியொன்றினை ஆரம்பித்துள்ளதுடன் இன்று அப்பேரணி நீர் கொழுமபை வந்தடைந்தது. அப்பேரணியானது 9 ஆம் திகதி கொழும்பு – கோட்டை கோட்டா கோ கமவை வந்தடையும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் 9 ஆம் திகதி, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இஸ்லாமிய மதத் தலைவர்களான மெளலவிமாரும் பேரணியாக கோட்டா கோ கம நோக்கி செல்லவுள்ளனர்.
இன்று ( 7) பல அமைப்புக்களை பிரதி நிதித்துவம் செய்யும் தேரர்கள், கோட்டை ரயில் நிலையத்தில் ஒன்று சேர்ந்து பேரணியாக புறக்கோட்டை – ஓல்கொட் மாவத்தை ஸ்ரீ போதிருக்காராம விகாரைக்கு முன்பாக சென்று அங்கு சத்தியாகிரக போராட்டம் ஒன்றினை ஆரம்பித்த நிலையில், இது தற்போதும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.