சந்திமால், தீக்ஷன துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பு ; இலங்கை 222, பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 24 ஓட்டங்கள்

Date:


(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (16) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது.

தினேஷ் சந்திமால் பெற்ற அரைச் சதம், ஓஷத பெர்னாண்டோ, மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் பெற்ற 30க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் இலங்கை அணி 200 ஓட்டங்களுக்கு மேல் பெற உதவியது.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய போட்டி கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளது.

அப்துல்லா ஷபிக் (13), இமாம் உல் ஹக் (2) ஆகிய இருவரே  ஆட்டமிழந்த வீரர்களாவர். அஸார் அலி 3 ஓட்டங்களுடனும் பாபர் அஸாம் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

ப்ரபாத் ஜயசூரிய 2 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கசுன் ராஜித்த 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

சுழல் பந்துவீச்சாளர்களுக்கு இடையேயான போட்டியாக அமையும் என கருதப்பட்ட போதிலும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள் தம்மிடையே 7 விக்கெட்களைப் பகிர்ந்தனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

போட்டியின் 3ஆவது ஓவரில் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன (1) ஆட்டமிழந்தார்.

எனினும் ஓஷத பெர்னாண்டோ (35), குசல் மெண்டிஸ் (21) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியை நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல முயற்சித்தனர். ஆனால், இருவரும் ஒரே மொத்த எண்ணிக்கையில் (60 ஓட்டங்கள்) ஆட்டமிழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து 15 பந்துகளை தடுமாற்றத்துடன் எதிர்கொண்ட ஏஞ்சலோ மெத்யூஸ் ஓட்டம் பெறாமல் வெளியேறினார். (68-4 விக்.).

மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தபோது தனஞ்சய டி சில்வா (14)  ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து நிரோஷன் திக்வெல்ல (4), ரமேஷ் மெண்டிஸ் (11), ப்ரபாத் ஜயசூரிய (3) ஆகிய மூவரும் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் களம் விட்டு வெளியேறினர். (133 – 8 விக்.)

மறுபக்கத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்ற தினேஷ் சந்திமால் 9ஆவது விக்கெட்டில் மஹீஷ் தீக்ஷனவுடன் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தார்.

சந்திமால் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 76 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஹசன் அலியின் பந்தை கவர் திசையை நோக்கி ஓங்கி அடித்தார்.   சந்திமால் அடித்த பந்தை நோக்கி வலப்புறமாக  தாவிய  யாசிர் ஷா   மிகவும் கடினமான பிடியை எடுத்து அவரை ஆட்டமிழக்கச் செய்தார்.

கடைசி விக்கெட்டில் ஜோடி சேர்ந்த தீன்ஷனவும் கசுன் ராஜித்தவும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை சோதனையில் ஆழ்த்தி 45 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணி 200 ஓட்டங்களுக்கு மேல் பெறுவதை உறுதி செய்தனர்.

தனது 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் மஹீஷ் தீக்ஷன திறமையாகத் துடுப்பெடுத்தாடி 38 ஓட்டங்களைப் பெற்றார்.

கசுன் ராஜித்த 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹசன் அலி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் யாசிர் ஷா 66 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.



Share post:

Popular

More like this
Related

World News: Stay Updated with Global Headlines

In today's fast-paced world, staying updated with global headlines...

The Evolution of Entertainment: A Journey Through Time

The world of entertainment has undergone a transformative journey,...

Breaking News 2024: Navigating Through the Maze of Information

In today's rapidly evolving world, staying informed about the...

Embracing the Magic: A Journey into the World of Entertainment

Entertainment, in all its forms, has the remarkable ability...