(எம்.மனோசித்ரா)
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் வெற்றியளிப்பதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெறும் என உறுதியளித்துள்ள இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் , அரச நிதி முகாமைத்துவத்திற்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க திறைசேரியின் ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபேர்ட் கப்ரொத் மற்றும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலாளர் கெலி கெய்டெலிங் ஆகியோரை உள்ளடக்கிய இராஜதந்திர குழு 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடைந்தது.
இக்குழு முதற்கட்டமாக இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்து தீர்க்கமான கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.
அதற்கமைய பிரதமருடன் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே , சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
பிரதமர் மற்றும் அமெரிக்க இராஜதந்திரகளுக்கிடையிலான இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் கலந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பில் டுவிட்டர் பதிவிட்டுள்ள அவர் , ‘ இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அமெரிக்க இராஜதந்திரிகளுடன் சந்தித்தோம்.
இலங்கை கடும் சவால்களை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் , வளமான, பாதுகாப்பான மற்றும் ஜனநாயகம் மிக்க எதிர்காலத்தை அடைய உதவும் வகையில் நாம் தொடர்ந்தும் உதவுவதோடு , நீண்ட கால கூட்டாண்மையையும் வழங்குவோம்.’ என்றார்.