இந்தியாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக மூன்றாது நாளாக வட மாநிலங்களில் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்திய மத்திய அரசு புதியதாக அக்னிபாத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இராணுவத்தில் ஆட்களை சேர்க்கும் மத்திய அரசின் நான்கு ஆண்டு திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
17 வயது முதல் 21 வயது வரை இராணுவத்தில் இணைந்து பணியாற்றலாம் என மத்திய அரசின் அறிவிப்பை வன்மையாக கண்டித்துள்ள வட மாநிலத்தினர், இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், இந்த கோரிக்கையை இந்திய மத்திய அரசு பரிசீலிக்காததால் வட மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 3 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது.
ஏற்கனவே வீதி மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் போராட்டக்காரர்கள், இன்றும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
பீகாரில் மட்டும் பல ரயில் நிலையங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
இதேபோல் உத்தரப்பிரதேசத்திலும் ரயில் சேவை மற்றும் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் நடைபெறும் வீரியமான போராட்டத்தால் ரயில்வே திணைக்களம் முன்கூட்டியே ரயில் சேவையை நிறுத்தியுள்ளது.
இருப்பினும், ரயில் நிலையங்களுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், ரயில்களுக்கு தீவைத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். மத்தியப்பிரதேசத்திலும் போராட்டம் வெடித்துள்ளது.
தென் மாநிலங்களில் முதலாவதாக தெலங்கானாவில் போராட்டம் வெடித்துள்ளது.
இதனால், அம்மாநிலத்திலும் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே, போராட்டத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.